வாழ்க்கை
சக்கரத்தில் நம்பிக்கை அச்சாணி கழன்று விட்டால் விபத்தும், விபரீதமும்,
தோல்வியும் நடந்தே தீரும். நம்மிடையே உள்ள நம்பிக்கையை தொலைத்து
விட்டால் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவே பொருள்.
நம்பிக்கை
நம்மை விட்டு நழுவும் போது புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, முயற்சி, வெற்றி
எல்லாமே விலகி ஓடுகிறது. இருள் சூழ்கிறது, வாழ்க்கை சுமையாகிறது.
நம்பிக்கைவாதிகளுக்கு ஒரே பாதைதான் உண்டு; அது வெற்றிப் பாதை. நம்பிக்கை
இல்லாதோருக்கு ஆயிரம் பாதைகள் இருக்கும். கற்களும் முட்களும் காணப்படும்
பாதைகள்; இலக்கு இல்லாத பாதைகள் அந்த பாதைகளில் பயணிப்போர் எங்கோ ஓர்
பள்ளத்தில் விழ நேரிடலாம்; தற்கொலைக்கு தள்ளப்படலாம்; பிறரிடமிருந்து
தனிமைப்பட்டு தவிக்க நேரிடலாம்.
இந் நிலையில்
மலர் மருந்துகள் மனிதனின் மனத்தில் நம்பிக்கை உணர்வு ஊட்டுகின்றன.
இம்மருந்துகள் உள்ளத்திற்கு வலிமை சேர்க்கின்றன, பார்வையில் புது
வெளிச்சம் பாய்ச்சுகின்றன, விழுந்து கிடக்கும் மனிதனை எழுந்து நிற்கச்
செய்கின்றன.
மலர்
மருத்துவம் மருத்துவ உலகின் மகத்தான கண்டுபிடிப்பு. டாக்டர் ஹானிமன்
கண்டுபிடித்த ஹோமியோபதி மருத்துவமும், டாக்டர் எட்வர்ட் பேட்ச்
கண்டுபிடித்த மலர் மருத்துவமும் மட்டுமே மனித மனங்களை முழுமையாக ஆய்வு
செய்து மருந்தளித்து குணப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட நபரின்
வார்த்தைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு
ஆய்வு செய்து உரிய மலர் மருந்துகள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்போது
அவரது வாழ்வில் மாற்றமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது.
எது செய்தாலும்
தோல்வி உறுதி என்று எதிர்மறையான முடிவோடு, கால நேரத்தை வீணாக்கி,
முன்னேற்றத்தை கெடுத்துக் கொள்பவர்கள் பலருண்டு. இத்தகையவர்கள்
நம்பிக்கையின்மையை போக்கி நம்பிக்கையூட்டவும், தாழ்வு மனப்பான்மையை
தகர்த்தெறியவும் லார்ச் எனும் மலர் மருந்து பயன்படுகிறது.
சிலர்
நம்பிக்கையுடன் செயல்களில் இறங்குவார்கள். முயற்சிப்பார்கள். கடுமையாக
உழைப்பார்கள். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லையெனில் மனம் தளர்ந்து
போவார்கள். அவ நம்பிக்கைக்கு ஆளாவார்கள். இருப்பினும் மீண்டும்
முயற்சிப்பார்கள் ஆனாலும் வெற்றி விலகி விலகிச் செல்லும். கடினமாக
உழைத்தும் வெற்றி கிட்டாததால் மனமும் உடலும் களைப்படைவார்கள். இவர்களின்
உடல், உள்ளப் பிரச்சனைகளை தீர்க்கவும் வெற்றி கிட்டவும் ஓக் எனும் மலர்
மருந்து பெரிதும் பயன்படும்.
சிலர் தம்
திறமை மீதும், தமது சொந்த முடிவுகள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை.
எப்போதும் மற்றவர்களின் ஆலோசனைகளை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அதில்
நஷ்டமேற்பட்ட பின்னரும் கூட எது சரியானது என்று சுயமான முடிவுக்கு வர
மாட்டார்கள், ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளும்போது,
வேறு ஒரு நண்பர் மற்றொரு மருத்துவரை குறிப்பிட்டால் உடனே அவரிடம்
சிகிச்சைக்குச் செல்வார். இதனால் முழு குணம் ஏற்படாமல் சிரமப்படுவார்,
நம்பிக்கையோடு சுய முடிவு மேற்கொண்டு செயல் பட மாட்டார். பிறரது
சொற்படி, ஆலோசனைப்படி இயங்கும் இத்தகையவர்களின் பலவீனமான,
தன்னம்பிக்கையற்ற மன நிலையை மாற்றியமைக்க செராட்டோ என்ற மலர் மருந்து
மிகவும் பயன்படும்.
சிலர் தங்களின்
நாட்பட்ட நோய்களுக்காகப் பல்வேறு சிகிச்சைகள் செய்தும் குணமாகாமல்
நம்பிக்கை இழந்திருப்பார்கள் இனி குணமாக வாய்ப்பே இல்லை, எந்த
மருத்துவரையும் எந்த மருந்தையும் நம்பிப் பயனே இல்லை என்று அவ நம்பிக்கையில்
முடங்கிப் போவார்கள். ஆழமாய் ஊடுருவி நிற்கும் இவர்களது அவ நம்பிக்கை
அவர்களின் உடல் நோய்களை வளர்க்கும், புதிய நோய்களை தோற்றுவிக்கும்.
இத்தகைய அவ நம்பிக்கையாளர்களுக்கு கோர்ஸ் என்ற மலர் மருந்து பேருதவி
புரியும்.
சிலர்
வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை மட்டுமே பார்ப்பார்கள். தோல்விகளால்
துவண்டு மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாவார்கள். துன்பக் கடலில் நீந்தும்
இவர்களுக்கு தோணியாக உதவும் மலர் மருந்து ஜென்ஸியன். சிலர் எப்போதும்
கவலையுடன் காணப்படுவார்கள். அவர்களின் கவலைக்கு காரணம் இருக்காது. நிகழ்
காலத்தில் சோகம் சூழ்ந்து, எதிர்காலமே இருளாகத் தெரிந்து இவர்களை
நம்பிக்கையற்றவர்களாய் ஆக்கிவிடும். பிறருடன் பழக இயலாது, இவர்களது
மனோபாரத்தை இறக்கி வைக்க மஸ்டர்டு என்ற மலர் மருந்து துணைபுரியும்.
மகாகவி
பாரதிக்கு அமைந்தது வறுமையான வாழ்க்கை. ஆட்சியாளர்கள் கொடுத்த
தொந்தரவுகளும் கொஞ்சமில்லை. கடன் சுமையும், பட்டிணியும், அரசின்
கெடுபிடிகளும் பாரதியின் மன உறுதியை நம்பிக்கையை குலைக்க முடியவில்லை
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் இன்று புதிதாய் பிறந்தோம்
என்றும் பாடினான். அவனது ஆழமுள்ள அர்த்தமுள்ள தொலை நோக்கு பார்வை கொண்ட
நம்பிக்கையால் ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று மகிழ்ச்சிப் பண்
பாடினான், நம்பிக்கை என்பது மகத்தான மனோபலம். அதனைப் பெற மலர் மருந்து
சாலச் சிறந்தது.
நன்றி - நூல் : ஹோமியோபதியும் மனித நலமும்.
|